Senthil Arumugam's blog

Tuesday, August 29, 2006

விளாத்திக் குளங்களுக்குத்தேவை குளங்கள்

- செந்தில் ஆறுமுகம்

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுக்காவிலுள்ள பல கிராமங்களைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. விளத்திக்குளத்திற்குச் செல்ல கோவில்பட்டியிலிருத்து ஒரு மணிநேரப் பேருந்துப் பயணம். சுமார் 30 நிமிட பயணத்திற்குப் பிறகு விளாத்திக்குளம் ஊர் வரும் வரை கண்களில் பட்ட காட்சிகள் என்னுள் பல கேள்விகளை எழுப்பின. கிட்டத்தட்ட 15 கி.மி தூரத்திற்கு வழியெங்கும் இருபுறங்களிலும் ஒரே "பசுமை". ஆனால் வேதனையான விஷயம் என்னவெனில் இத்த பசுமையைத் தந்து கொண்டிருந்தது அங்கிருந்த வேலிக்கருவை(இதனை "சீமைகருவேலை" என்றும் "வேலிக்காத்தான்" என்றும் அழைப்பர்கள்) முட்செடிகள்,மரங்கள்,!!

மேலும் விசாரித்த போது சொன்னார்கள்,விளத்திக்குளம் தாலுக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 1000 ஏக்கர் வரை இந்த முட்செடிகள் தான் விவசாயம் என்று.என்னுள் கேள்விகள் பல எழுந்ததற்குக் காரணம் என்னவெனில், இந்த வேலிக்கருவை முட்செடி நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை.மேலும் இந்த செடியுள்ள இடத்திலிருந்து சில அடிதூரம் வரை மற்ற செடிகளை வளர விடாது என்று கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. அது உண்மைதான் என்று உள்ளுர் மக்கள் சொன்னார்கள்.

சரி,இந்த முட்செடிகளை வைத்துக்கொண்டு அப்படி என்னதான் விவசாயம் செய்கிரார்கள் என்று விசாரித்தேன்.தண்ணீர் எதுவும் ஊற்றாமல் தானே வளரும் இந்த முட்செடிகளை 2 வருடத்திற்கு ஒருமுறை அறுவடை செய்வார்களாம்.வெட்டிய முட்செடிகளை எரித்து கரியாக்கி அந்தக் கரியை விற்பனை செய்கிறார்களாம். "காசைக் கரியாக்குவதை" கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு கரியைக் காசாக்கிக் கொண்டுள்ளார்கள்.1 ஏக்கர் நிலத்தில் வளரும் வேலிக்கருவையிலிருந்து 5 முதல் 6 டன் வரை கரி கிடைக்குமாம். ஒரு டன் கரி ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்குமாம்.1 ஏக்கரில் செடி வெட்டு கூலி போன்ற எல்லா செலவுகளும் போக கையில் நிற்பது கிட்டத்தட்ட் ரூ.1500 தானாம். அதாவது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு ரூ.1500 கிடைக்கிரது!! வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.750 வருமானம்!

கரியைக் காசாக்கும் இத்த நடைமுறையை எப்படியெல்லாம் பார்க்கலாம்?

நிலத்தை பண்படுத்தாமல்,உரமிடாமல்,நாற்று நடாமல்,களையெடுக்காமல், பூச்சிமருந்து அடிக்காமல் மக்களுக்கு ஏதோ இந்த இந்தத் தொகையாவது கிடைக்கிறதே என்று பரிதாபப் பார்வை பார்ப்பது ஒருவகை.

ஆண்டவன் அவர்களுக்குப் படியளந்தது அவ்வளவுதான் என்று தத்துவம் பேசுவது ஒருவகை.

தண்ணிர் வசதி இல்லை. அதனால்தான் நிலங்கள் இப்படி கிடக்கின்றன என்று சப்பைக் கட்டு கட்டி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வது ஒரு வகை.

இந்தப்பார்வைகள் எதுவும் நம் முன்னேற்றத்திற்கோ,நாட்டு முன்னேற்றத்திற்கோ பயனளிக்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும் இத்தனை ஆண்டுகாலம் நாம் இப்படியே இருந்ததால்தான்; அந்த வறண்ட நிலங்கள் போல நாம் அணுகுமுறையிலும் வறட்சி இருந்ததால்தான் விவசாயம் நடக்க வேண்டிய நிலங்களில் முட்செடிகள் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டு அரசியல் போல! தரிசு நிலங்களை உருவாக்குவதில் வேலிக்கருவை முட்செடிகளின் பங்கு முக்கியமானது.

இவ்விடத்தில் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சி அறிவிக்கும் ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் அளிக்கும் திட்டத்தைப் பற்றி ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.தேர்தல் வாக்குறுதியின் முழு வடிவமும் என்னவெனில்:" - தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 ஏக்கர் தரிசு நிலங்களைப் பண்படுத்தி நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்- புன் செய் நிலங்களையும் தரிசு நிலங்களையும் முறையான விளைச்சல் நிலங்களாக மாற்றிட நுண்ணிய நீர்ப்பிரி முகடு வேளாண்மை போன்ற (Miro Watershed management) புதிய தொழில் நுட்பங்களைக் கையாள்வதறகு வழிவகை காண்போம் "தரிசு நிலங்கள் பண்படுத்தி வழங்கப்படும் என்பதே வாக்குறுதி. அதாவது தற்போதுள்ள நிலங்களை அப்படியே கொடுத்தால் பயனில்லை என்பது தெளிவாகிறது."புதிய தொழில் நுட்பங்கள்" கையாளப்படும் என்றும் சொல்லப்பட்டது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய திட்டம்தான்;அணுகுமுறைதான்.இந்த 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை அரசு பண்படுத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? பண்படுத்திய நிலங்கள் பயன்பாட்டிற்கு வர எவ்வளவு காலம் ஆகும்? 2 ஏக்கர் கொடுக்கப்படுமா? கொடுக்கப்படாதா? என்ற துணைக் கேள்விகளை பின்னர் கேட்போம். தற்போது அதில் சிக்கி முக்கியக் கேள்வியை நாம் மறந்துவிடக்கூடாது.சரி அந்த முக்கிய கேள்விதான் என்ன?'

அந்த 65 இலட்சம் ஏக்கர் நிலம் தரிசு ஆனதேன்?'

இப்போது முக்கியக் கேள்வி தொடர்பான சில துணைக்கேள்விகளைக் கேட்போம்.

* இதுவரை விவசாய ஆராய்ச்சிகளுக்கு அரசால் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? அதனால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு உயர்ந்தது?

* கடந்த பல ஆண்டுகளில் மூடப்பட்ட, அசுத்தப்படுத்தப்பட்ட, ஆக்ரமிக்கப்பட்ட "பழைய தொழில் நுட்பங்களான" ஏரிகள், குளங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

* கடந்த பல ஆண்டுகளில் திறக்கப்பட்ட அணைக்கட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?.

*இதுவரை தரிசு நில மேம்பட்டுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் யாவை? செலவிடப்பட்டத் தொகை எவ்வளவு? அதன் பயங்கள் என்ன?.என்று கிராம நலனில்,நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும். படித்தவர்கள், அறிவாளிகள் கேட்க வேண்டும். விவசாய சங்கங்கள் கேட்க வேண்டும் குறிப்பாக அறிவும்,ஆற்றலும் ஒருங்கே பெற்ற இளைஞர்கள் கேட்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் மேற்சொன்ன அனைத்துத் தகவல்களையும் நாம் பெற முடியும். இத்தகைய தகவல்கள் கேட்கப்படும் போதுதான் அறிவிக்கப்பட்ட திட்டத்தை, கொள்கையை அமுல்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அக்கறை அதிகரிக்கும்.

விளாத்திக்குளத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார் அன்று பாடினார் :

"வங்கத்தில் ஒடிவரும் நிரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்!"

அவர் இன்று தமிழகத்தை சுற்றிப்பார்த்தால்

"உள்ளுரில் பெய்யும் மழை நீரையும்
கடலில் கடக்கும் தண்ணீரையும்முதலில் சேமிப்போம்"

என்று பாடியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.பெயரில் குளம் இருந்தாலும் ஊரில் வறட்சிதான். விளாத்திக்குளங்கள் முன்னேறத் தேவையானது பத்திரிக்கைகள், தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்படும் திட்டங்களல்ல. உள்ளூரில் நிலத்தில் தோண்டப்படும் குளங்கள் தான்.
செந்தில் ஆறுமுகம்
ஆகஸ்ட்- 2006

வேலிக்கருவை தொடர்பான பிற தகவல்கள்:

1. வேலிக்கருவை அழிக்க புறப்பட்ட திட்டங்கள்1996 - 2001 வரை ஆட்சி செய்த தி.மு,க. அரசாங்கம் ஒவ்வொரு 50 ஏக்கர் நிலங்களிலும் முள் எடுத்து சுத்தப்படுத்தி, அரசு செலவில் மண் ஆய்வு செய்து அதன் தன்மைக்கேற்ப மரக்கன்றுகள் என்று தருவோம் என்று தெரிவித்தது.2001 - 2006 வரை ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசாங்கம் பொறுப்புக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 10 லட்சம் ஏக்கர் நிலத்தில் இந்த முட்செடிகள் அகற்றப்படும் என்றும் முட்செடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளும், பழத்தோட்டங்களும் அமைக்கப்படும் என்று அறிவித்தது.

2. வேலிக்கருவை (அ) வேலிக்காத்தான் தழிழகத்துக்கு வந்தது எப்படி? பரவுவது எப்படி?1960களில் இந்த விதைகள் மெக்சிகோ, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு விமானம் மூலம் தமிழகத்தின் வறட்சியான பகுதுகளில் தூவப்பட்டது. அப்போது வளர்ந்த இச்செடிகள் அன்றைய தினம் எரிபொருளாகவும், கரி உற்பத்திக்கும் பயன்பட்டதென்னவோ உண்மை. ஆனால் இன்றைக்கு பல்வேறு விதமான கரிகள், எரிபொருட்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், இச் செடி அவசியமில்லாமல் போய் சுமார் 25 வருடங்களாகிவிட்டன. இந்த செடி பரவும் விதம் சுவாரசியமானது.இந்த முட்செடிகளின் காய்களை சாப்பிட்டு விட்டு ஆடுகள் போடும் புளுக்கைகள் மூலம் இது பல இடங்களில் வளர்ந்து விடுகிறது.

நன்றி : சாவித்திரி கண்ணனின் "கண்டதும் கேட்டதும்"

Tuesday, August 22, 2006

முதலமைச்சர் முருகன்

செந்தில் ஆறுமுகம்

ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிகிறார் முருகன். வயது 40. தினமும் 12 மணி நேர வேலை. வாரத்தில் 7 நாளும் வேலை. மாதச்சம்பளம் ரூ.2000 !!! அப்பா இறந்துவிட்டார். நோயாளியான அம்மாவைக் கவனித்துக் கொள்ளவேண்டிய காரணத்தாலும், குடும்ப வறுமையின் காரணத்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்ப சூழலின் சோகங்கள் தன்னைச் சிறைபிடித்தாலும் நாட்டு நடப்பை கவனிப்பது, பலவகைப் புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் ஆர்வமுடையவர் முருகன். சமீபத்தில் எனக்கு அறிமுகமானார் இந்த நண்பர்.

முருகன் போன்ற சாதாரணத் தொழிலாளிகள் மனத்தில் நாட்டு நடப்பைப் பற்றிய பார்வை எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் " நீங்கள் தமிழக முதல்வரானால் எந்த 3 திட்டங்களை முதலில் நிறைவேற்றுவீர்கள் ?" என்று கேட்டேன்.

சிறிது யோசனைக்குப் பிறகு சொன்னார். முதல் திட்டம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல். இரண்டாவது, இலஞ்ச ஊழலை ஒழித்தல். மூன்றாவது, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வரல்.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் பற்றி விரிவாய் விளக்குங்களேன் என்று கேட்டபோது மடைதிறந்த வெள்ளமாய்க் கொட்டினார் முருகன்.

தான் தினந்தோறும் உபயோகிக்கும் பொருட்களையும் அதன் விலையையும் பட்டியலிட்டுக் காட்டி விலைவாசி எவ்வளவு உயர்ந்துவிட்டது பாருங்கள் என்றார். நான் முதல்வரானால் அடித்தட்டு மக்கள் உபயோகப்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒரு பைசா கூட அதிகரிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றுவேன் என்றார். தன் வருமானத்தின் பெரும்பகுதி அத்தியாவசியச் செலவுகளுக்கே சென்று விடுகிறது என்ற ஆதங்கத்தில் பேசினார் முருகன்.

தொடர்ந்து நடந்த உரையாடல்....

விலைவாசி உயரக்கூடாது என்று விரும்புகிற நீங்கள், உங்கள் நிறுவனத்தில் பலவருடங்களாகியும் சம்பள உயர்வு தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ?

எனக்கு சம்பளம் அதிகம் வேண்டுமானால் நல்ல சம்பளம் கொடுக்கும் வேறு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது நானே ஒரு சுயதொழில் தொடங்கவேண்டும்.

உங்களுக்குத்தான் ஆர்வமும் அறிவும் இருக்கிறதே பிறகென்ன ஒரு சுயதொழில் தொடங்கவேண்டியதுதானே?

என்னிடம் கையில் காசில்லை... வங்கியில்தான் தொழிற்கடன் வாங்க வேண்டும்.நல்லது.. ஏன் நீங்கள் முயற்சி செய்யக்கூடாது ?

வங்கியில் எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் எங்கு லோன் கொடுக்கிறார்கள்? ஏதாவது சிபாரிசு அல்லது சொத்து இருந்தால்தான் லோன் கிடைக்கும்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சரியான திட்டத்தோடு, தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களுக்கு லோன் கிடைக்க வாய்ப்புள்ளதே?

ஊரில் நிறையப் பேர் இப்படித்தான் சொல்றாங்க... ஆனால் வங்கிக்கு எங்களைப் போன்ற சாதாரண மக்கள் போனா முகம் கொடுத்தே பேசறதில்ல... பிறகெங்கு லோன் கேட்கறது ?

இப்படிச் சென்றது உரையாடல்.....சரி.. இப்ப இந்தப் பிரச்சனையை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். முருகன் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றுவேன் என்று சொன்ன முதல் திட்டத்தை திரும்பவும் ஆராய்வோம்.

அவர் சொன்ன திட்டம் 'அரசானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பது.' ஒரு அரசானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் முதல் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களில், செயல்பாடுகளில் முதல் கவனம் செலுத்த வேண்டுமா? அடித்தட்டு மக்கள் உயிர்வாழத் தேவையான உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைப்பது என்பதை அரசின் ஒரு அடிப்படைக் கடமையாகக் கருதலாமே தவிர அதை ஒரு தொலைநோக்குத் திட்டமாகக் கருதமுடியாது. ஒரு பொருளை உற்பத்தி விலையைவிடக் குறைவாக விற்றால் நஷ்டம் ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அது பொருளாக இருந்தாலும், அரசாங்கத்தின் சேவையாக இருந்தாலும் விலையேற்றம் நடந்தால் உடனே கொதித்து எழுகிறோம். விலை குறைப்பு பண்ணச் சொல்லி ஆர்ப்பாட்டம், அணிவகுப்பு நடத்துகிறோம். அதே சமயம் நமக்கு சம்பள உயர்வு, சலுகைகளில் தாரளம் வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். வருமானம் அதிகம் வேண்டும். ஆனால் பொருட்கள் மற்றும் அரசின் சேவைகள் குறைந்த விலைக்கு வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும் ? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

பொதுவாகவே ஒரு பிரச்சனையை ஆராய்ந்து தீர்க்க முற்படும்போது பிரச்சனையின் மூலம்(Root) என்று ஆய்ந்து அதனைத் தீர்க்க முற்பட வேண்டும். முருகன் உண்மையிலேயே விரும்புவது, 'விலைவாசிக் கட்டுப்பாடு அல்ல'. அவர் உண்மையில் விரும்புவது மகிழ்ச்சியான, இயல்பான வாழ்க்கை. நியாயமான ஆசை. ஆனால் இதற்கு அவருடைய வருமானம் போதவில்லை. வருமானத்தை அதிகரிக்க வழி தெரியவில்லை. உதவுவார், வழி காட்டுவோர் யாருமில்லை. இந்த குழப்பத்தில் 'விலைவாசி ஏற்றம்தான்' தன் குடும்ப மகிழ்ச்சியை சீர்குலைக்கிறது என்று முடிவெடுக்கிறார் முருகன். ஆழமாய் யோசித்துப் பார்த்தால் 'அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு' மட்டும் முருகனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையத் தந்துவிடாது? மருத்துவம்,கல்வி,வீடு, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், குடும்பத்தின் பொழுதுபோக்கு, பெற்றோர்களை கவனித்தல் போன்ற எத்தனையோ குடும்பத் தேவைகளை முருகன் சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் 'அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கட்டுப்பாடு' தீர்வாகிவிடுமா? வேரை பிடுங்காமல் எத்தனை முறை கிளையை, இலையை வெட்டினாலும் பயனில்லை.

சரி... முருகன் போன்றோர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுதான் என்ன?முருகன் மற்றும் நாட்டிலுள்ள எல்லோரும் தன்னுடைய முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி தன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான தகுதிகளை வளர்த்தெடுத்து, முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும். தகுதிகளை வளர்த்தெடுப்பது என்பது கல்வி சார்ந்தது. முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவது என்பது விவசாயம் இலாபகரமான தொழிலாக மாறுவதற்கான கொள்கை முடிவுகள், சிறுதொழில் செய்ய, தொழிற்சாலைகள் தொடங்க முன்வருவோரை ஊக்குவித்தல், எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் உள்ளன என்ற தகவலை மக்களிடம் சென்று சேர்த்தல் போன்றவை அடங்கும்.

கல்வி சார்ந்து யோசிக்கும்போது தமிழ்நாட்டில்தான் 248 பொறியியற் கல்லூரிகள், 215 மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்(மருத்துவ, துணை மருத்துவ கல்லூரிகள் உட்பட), 236 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 670 பிற கல்லூரிகள்(கலை அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல) உள்ளனவே என்று யோசிக்கத் தோன்றும்? உயர்கல்வியின் உண்மை நிலை அறிய தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டசபைத் தொடரில் உயர்கல்வி அமைச்சர் முனைவர்.பொன்முடி, தனது துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பு அறிக்கையின் முதல் பக்கத்திலுள்ள தகவல் நமக்கு உதவும்..

" நமது மாநிலத்தில் தகுதியுடைய இளைஞர்களில் 7 விழுக்காடு வரைதான் உயர்கல்வியைத் தொடரக்கூடிய நிலைமை உள்ளது. மேலை நாடுகளில் இந்த விகிதம் 80 விழுக்காடு வரை உள்ளது. 1976-77 ஆம் ஆண்டில் 1.5 விழுக்காடு என்ற நிலைமையில் இருந்த சீனா 2005 ஆம் ஆண்டில் 25 விழுக்காடு என்ற நிலைமைக்கு வந்துள்ளது. ஆகையால் தகுதியுடைய இளைஞர்களில் 7 விழுக்காடு வரைதான் உயர்கல்வியைத் தொடர முடியும் என்ற நிலையை மாற்றி 2020ஆம் ஆண்டிற்குள் 25 விழுக்காடாக உயர்த்திட இவ்வரசு பாடுபடும்"

இதுதான் உயர்கல்வி அமைச்சர் தமிழகத்தின் உயர்கல்வியின் நிலை குறித்து வெளியிட்ட அறிக்கை.பள்ளிப்படிப்பை(10 அல்லது 12) முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்கும் படிப்பைத்தான் உயர்கல்வி என்கிறோம். மேற்கண்ட அறிக்கையின்படி 100க்கு 7 மாணவர்கள்தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள். மீதியுள்ள 93 பேரின் நிலை ? ? இதில் பலர், முருகன் போன்று வேலைக்காக வாழ்க்கையை அடமானம் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் எத்தனையோ இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உயர்கல்வி, குறிப்பாக தொழிற்கல்வியை கற்க விரும்புவோர் அனைவருக்கும் கல்வி வழங்க அரசானது போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படியானால் இந்த 93 பேர் கற்ற பள்ளிக் கல்வியாவது நடைமுறை வாழ்க்கைக்குப் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்றால், 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். எழுத, படிக்க, கணக்குப் போடத் தெரியும் இயந்திரங்களைத்தான் இன்றைய தொடக்கக் கல்வி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. ஆங்காங்கு நல்லாசிரியர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மாணவர்கள் எழுத, படிக்க, கணக்குப் போடத் தெரியும் இயந்திரங்களாகத்தான் பள்ளியை விட்டு வெளிவருகிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தை மற்றும் குறை சொல்ல முடியாது. பெற்றோர்களின் ஈடுபாடு,ஊடகங்களின் பங்களிப்பு(?) போன்ற பல்வேறு காரணங்கள் கொண்ட சிலந்தி வலைப் பிரச்சனை இது.

ஆக, பள்ளிக் கல்வி, உயர்கல்வியின் நிலை இது.

அடுத்தது, கல்வி கற்ற அனைவரும் சுயமாய் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்று எப்படியுள்ளன ? நாட்டின் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மேல் ஈடுபட்டிருக்கும் விவசாயம் இலாபகரமான தொழில் இல்லை என்று முத்திரை குத்தியாயிற்று. பள்ளி, கல்லூரி படித்து முடித்து வருவோரில் மிகச் சிலரே விவசாயம் செய்ய முன் வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். விவசாயம் வளம் கொழிக்கும் தொழில் என்ற நிலையை அடைவதற்கான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். சுயமாய் தொழில் தொடங்க வரும் இளைஞர்களை, குறிப்பாக கிராமத்து இளைஞர்களை அரவணைத்து, பயிற்சியளித்து வங்கிகள் கடனுதவியளிக்க வேண்டும். உலகளவில் தேவையான, நம்மூரில் தயாரிக்க வாய்ப்புள்ள பொருட்களைக் கண்டறிந்து தயாரித்து ஏற்றுமதி செய்யவேண்டும். ஆக, குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்தெடுப்பதும், சுயமாய் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுமே அரசின் முக்கியக் கடமையாகிறது.

உரையாடல் முடிந்து விடைபெறும்போது முருகனிடம் கேட்டேன்....இப்போது சொல்லுங்கள் நீங்கள் முதலமைச்சரானால் செயல்படுத்தும் முதல் திட்டம் "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதா?"
இல்லை வேறு ஏதேனும் உண்டா?

" பள்ளிகள் வாழ்க்கைக்கான கல்வியைத் தரணும்.
வங்கிகள் வளர்வதற்கான வழியைத் தரணும்.
சொந்தக் காலில் நின்று - மக்கள் முன்னேறனும்...."


இதுதான் நான் செயல்படுத்தப் போகும் முதல் திட்டம் என்றார்...... முதலமைச்சர் முருகன்